நம் தாயாகிய ஸ்ரீ செண்பக நாச்சியார் அம்மனின் வலைத்தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்...

Click Here for Notice... கோவில் திருவிழா அழைப்பிதழ் 13/05/2024 to 15/05/2024... அனைவரும் வருக அம்மன் அருள் பெறுக!

நீறுடைக் கப்பறையும் நின்றதிருக் கோலமுமாய்
வீறுடைக் கல்வியொடு வித்தையருள் ஞானமுடன்
ஆறுடைக் கமண்டலத் தகத்தீச னிசைவிலொரு
சோறுடைக் கவற்குளத் தலமருள் செண்பகமே...

                   -எஸ். கனகராஜ்

                 (செண்பக நாச்சியார் அந்தாதி பாடல்கள்)


முன்னுரை
Service image

    வேர்களாய் விழுதுகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் வம்சங்களை வரமருளி வளர்ச்சியோடு வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ செண்பக நாச்சியார் அம்மனின் சீர்புகழை ஊரறிய உலகறிய செய்வதில், சிறு முயற்சியாய் உங்கள் ஒவ்வொருவரோடும் கை கோர்த்து இந்த வலைதளத்தை உருவாக்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

    பக்தியும் பண்பாடும் நிறைந்த நம் பாரதம் மட்டுமன்றி பார் முழுதும் அம்மன் புகழ் பரவ வேண்டி அம்மனின் பாதம் பணிகின்றோம்.

    இவ்வலைதளம் செண்பக நாச்சியார் அம்மன் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்

"


ஸ்ரீ செண்பக நாச்சியார் அம்மன் வரலாறு

செண்பக நாச்சியாரின் தோற்றம்:



    ஆதி சிவன் வாழும் கைலாய மலையின் ஒரு பகுதியே செண்பகச் சோலை ஆகும். சோலை என்றால் எல்லா வளமும் செழிப்பும் நிறைந்த பகுதி என்று பொருள். அங்கு பரந்து விரிந்து வளர்ந்த செண்பகமா மரத்தின் அடியில் தூண்டா மணி விளக்குச் சுடரொளியில் தான்தோன்றி தெய்வமாக ஸ்ரீ செண்பக நாச்சியார் அம்மன் ஆயிரம்கோடி சூரியப் பிரகாசத்துடன் அழகு சிம்மாசனத்தில் கையில் திருநீற்றுக் கிண்ணத்துடன் ஜெப மாலையும் ஏந்தியவாறு வீற்றிருந்தார். அம்மனுக்கு பணிவிடை செய்யும் பணிப் பெண்களும் முனிவர்களும் ஆன்றோர்களும் மிகுந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தனர்.


தேவலோக மாதர்கள் ஆசி பெறுதல்:

    இந்திர சபையின் தலைவனான தேவேந்திரன் முன்னிலையில் நடனமாடும் நடன மாதர்கள் கைலாச மலையை சுற்றிப் பார்க்கும் ஆசையுடன் இந்திரனிடம் அனுமதி பெறாமலேயே புறப்பட்டனர். மலையின் ஒவ்வொரு பகுதியையும் பார்த்து வந்தவர்கள், தூண்டா மணி விளக்கின் சுடரொளியால் ஈர்க்கப்பட்டு, வளம் நிறைந்த செண்பகச் சோலையைக் கண்டு வியப்புற்றனர். அங்கு சாந்த வடிவாய் அமர்ந்து ஆட்சி செய்யும் செண்பக நாச்சியாரைக் கண்டு பக்தியோடு பணிந்தனர். பெரும் புண்ணியத்தைப் பெற்றது போல் மகிழ்ந்து அம்மன் முன்னிலையில் ஆடிப் பாடினர். அவர்கள் ஆட்டத்தில் மகிழ்ந்த அம்மன், அவர்களை அருகழைத்து, வேண்டிய பரிசுப் பொருள்களை வழங்கி ஆசி கூறி அனுப்பி வைத்தார்.


செண்பக நாச்சியார் அம்மன், சிவபெருமான் சந்திப்பு:

    தேவலோகத்தில் இந்திரன் அன்றைய தர்பாரை ஆரம்பிக்க நடன மாதர்கள் வராததைக் கண்டு மிக்க சினத்துடன் இருந்தான். அம்மனை தரிசித்த பரவசம் ஒரு புறம் இருந்தாலும், இந்திரன் கோபத்திற்கு ஆளாக வேண்டியதை எண்ணி பதற்றத்துடன், ஓடி வந்த நடன மாதர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்திய இந்திரன், கேட்கக் கூடாத கேள்விகளால் அவர்கை வதைத்தான். ஆனால் நடன மாதர்கள் மிகப் பொறுமையாய், தாங்கள் கைலாச மலைக்கு சென்று வந்ததையும் அங்கு அருள்தரும் தெய்வமான, ஸ்ரீ செண்பக நாச்சியார் அம்மனை பார்த்ததையும் விளக்கினர். ஒருவாறாய் கோபம் தணிந்த தேவேந்திரன் அம்மனை பார்க்க ஆர்வப்பட்டு, ஐராவதம் எனும் வெள்ளை யானை மீது ஏறி புறப்பட்டான்.



இந்திர லோகத்தை விட்டு வெளியே வந்த இந்திரனை தேவலோக முனிவர் ஒருவர் தடுத்து நிறுத்தி, தேவேந்திரா..! நீ அம்மனைப் பார்க்க தனித்து செல்வது சரியல்ல. ஆகவே, கைலாயம் சென்று சிவபெருமானிடம் விபரத்தைக் கூறுவதே சரி என்றார். இந்திரன் மூலம் அனைத்தையும் அறிந்த சிவபெருமான், பார்வதி தேவியை அழைத்து, செண்பகச் சோலை சென்று அம்மனை அழைத்து வர பணித்தார். அவரது கட்டளைக்கு பணிந்த பார்வதி தேவி, செண்பகச் சோலை வரக் கண்டதும் செண்பக நாச்சியார் அகமகிழ்ந்தார். சிவபெருமான் அழைத்து வரச் சொன்னதைக் கேட்டு, கைலாயம் வந்து சேர்ந்தார். வரும் வழியில் சிவத்தொண்டர்கள் பலரின் மேடைகள் இருக்க, அனைவரின் விபரம் கேட்டறிந்தார்.


செண்பக நாச்சியார் அம்மன் ஆவினன்குடி வருகை:

    செண்பக நாச்சியார் அம்மனைக் கண்ட சிவபெருமான், பூலோகத்தில் நாச்சியார் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கினார். பூலோகத்தில் ஆவினங்குடி என்று ஒரு மலை இருப்பதாகவும் அங்கு வாழும் உயிரினங்கள், வழிநடத்துவார் இன்றி தடுமாறிப் போய் இருப்பதாகவும் கூறி அவைகளைக் காக்கும் தாயாய் ஆட்சி செய்யுமாறு வேண்டினார். சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்க திருஆவினன்குடி மலை வந்து சேர்ந்தார். அவருக்குத் துணையாக குருக்கள், சிவலோக பரிவாரங்கள், பால் பசுக்கள் மற்றும் பணிவிடைப் பெண்கள் அனைவரையும் அனுப்பி வைத்தார். ஆவினன்குடி மலை எந்த வளமும் இன்றி வறட்சியுடன் இருப்பதைக் கண்ட அம்மன் அதிர்ச்சியுற்று சிவபெருமானை வேண்டினார். வேண்டுதலுக்கு இணங்கிய சிவபெருமான் ஆவினன்குடி மலையை அனைத்து வளங்களும் நிறைந்த பகுதியாக மாற்றினார். மனமகிழ்ந்த செண்பக நாச்சியார் அங்கு வாழும் மக்களைக் காக்கும் தாயாக நல்லாட்சி செய்து வந்தார்.


அசுரர்கள் வருகை:

    அசுர குலத்தில் உதித்த அண்ணன் தம்பியர் இடும்பன் மற்றும் விடும்பன் ஆவர். அண்ணன் இடும்பன் பாதாள லோகத்தில் வாழ்ந்த இடும்பியை திருமணம் செய்திருந்தான். உணவில் திருப்தியில்லாததால், இடும்பி இடும்பனிடம் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட்டாள். அவளை கூட்டி வரப் புறப்பட்ட இரும்பன் தம்பியை அழைக்க தம்பியோ, ஆகாரம் போதாததால் தானே அண்ணி கோபித்துச் சென்றாள். எனவே, அவளுக்கு திருப்தியான அளவு சாப்பாடுடன் சென்று அவளை சந்திப்பது தானே சரியாகும் என்று, இருவரும் மலையளவு உணவு சமைத்து, காட்டு மிருகங்களான சிங்கம், புலி, யானை போன்றவற்றை நெருப்பில் சுட்டு, சாப்பாட்டுடன் கட்டி எடுத்துச் செல்ல முற்பட்டனர். தோளில் வைத்துச் சுமக்க காவட்டு போன்ற அமைப்பை ஏற்படுத்தி தூக்கினார்கள். அண்ணன் கட்டிய சாப்பாடுக்கு இணையாக தம்பியின் சாப்பாடு இல்லாததால், ஒரு புறம் தாழ்ந்தது.. சமப்படுத்த ஒரு கல் கிடைத்தால் நல்லது என்று எண்ணி ஆவினன்குடி மலையைத் தூக்க முற்பட்டனர். தன் இருப்பிடம் மொத்தமும் அதிர்வதைக் கண்ட செண்பக நாச்சியார் அம்மன், செண்பகச் சோலையில் இது போன்ற அனுபவம் இல்லாததால் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து சிவபெருமானை வேண்டினார். நாச்சியாரை இம்சிக்கும் இடும்பனுக்கும் விடும்பனுக்கும் புத்தி புகட்ட, புதல்வன் முருகனை உடனே அனுப்பி வைத்தார் சிவபெருமான்.


அசுரர்களுடன் முருகன் போர்:

    சிவபெருமானின் கட்டளைக்கு பணிந்த முருகன், செண்பக நாச்சியார் அம்மனின் இருப்பிடமான ஆவினன்குடி மலைக்கு வந்து சேர்ந்தார். இரண்டு அசுரர்களுடனும் கடுமையாக போரிட்டு இறுதியில் தம்பியாகிய விடும்பனை இரண்டாகப் பிளந்து தரையில் வீழ்த்தினார் முருகன். அதைக் கண்டு பயந்த இடும்பன், முருகனின் பாதத்தில் வீழ்ந்து பணிந்தான். அவனை சாதுவான முனிவனாக மாற்றி அம்மன் ஆலய வாயிற்காவலனாக அமரச் செய்தார் முருகன்.


அருதக்குட்டியை மகனாக ஏற்றல்:

    ஆவினன் குடியில் சிறப்புற ஆட்சி செய்து அங்குள்ள மக்களை காத்து வந்த செண்பக நாச்சியார், சில காலம் கழிந்த பின் குருக்களை அழைத்து, தான் தெற்கு நோக்கி பயணிக்க இருப்பதாகவும், தாங்கையூரில் வாழ்ந்து வரும் தன் மகனான அருதக்குட்டியை பார்க்க ஆவலாய் இருப்பதாகவும் கூற, குருக்கள் மற்றும் தெய்வப் படை பரிவாரங்களுடன், பல்லக்கில் புறப்பட்டார். வழியில் மதுரை மீனாட்சி மற்றும் பல தெய்வங்களையும் சந்தித்து பின்னர் தாங்கையூர் வந்து சேர்ந்தார். அருதக்குட்டியைக் கண்டு மகிழ்ச்சியுற்ற செண்பக நாச்சியார் அம்மன், அன்புடன் அரவணைத்து ஆசி வழங்கினார். தன் பரம்பரை காலம் காலமாய் செண்பக நாச்சியாருக்கு பணிவிடை செய்யும் என்று உறுதியளித்து அம்மன் அமர ஆலயம் அமைத்தார்.


அம்மன் தென்குமரி வருதல்:

    சில காலம் அங்கே அருளாட்சி செய்து அருதக்குட்டியின் பணிவிடைகளை ஏற்ற செண்பக நாச்சியார் அம்மன், அருதக்குட்டியின் வம்சத்தாருடன் அங்கிருந்து புறப்பட்டு குருக்கள் மற்றும் பரிவாரம் ஒரு சேர வந்து நவ்வலடி வந்து சில காலம் தங்கிய பின் அங்கிருந்து தென்குமரி தீர்த்தமாட வேண்டும் என்று கடலில் நீராடி, குமரி பகவதி அம்மனை சந்தித்தார். செண்பக நாச்சியார் அம்மனை கண்டதும் வரவேற்ற பகவதி அம்மன், செண்பக நாச்சியாரே..! நீ செண்பகச் சோலையில் செழிப்பாக வாழ்ந்து சிவபெருமான் வேண்டுதலால் ஆவினன்குடி மலையில் ஆட்சி செய்து குமரி வந்தவள் என்பதை நன்கு அறிவேன். இனிமேலும் நீ வேறு எங்கும் செல்ல வேண்டாம். உன்னோடு வந்தவர்களோடு, அருகில் உள்ள வடுகன்பற்று என்ற ஊரில் வாழ்ந்து வரும் அகத்தியரை சென்று பார் என்று கூறினார். அதன்படி பகவதியிடம் விடைபெற்ற செண்பக நாச்சியார் அம்மன், சக்கரைக்குளம், பண்டாரத்தோப்பு, சுக்குப்பாறைத் தேரிவிளை, எட்டுமுக்குக் கிணறு வழியாக அகத்தியர் வாழும் தலம் வந்து சேர்ந்தார்.


கவற்குளத்தில் திருக்கோவில் கொள்தல்:

    செண்பக நாச்சியாரைக் கண்டு மகிழ்ச்சியுற்ற அகத்தியர், வரவேற்று சக்தியின் அம்சமாய் நாச்சியார் இருப்பதைக் கண்டு, நல்லபேச்சி தட்டுடன் கூடிய கவற்குளம் என்ற ஊரையும் நிலங்களையும் தானமாய் கொடுத்து அரசாட்சி செய்யச் சொல்லி அனுப்பி வைத்தார். கவற்குளம் வந்த செண்பக நாச்சியார், மலர்ந்து விரிந்த தாமரைப் பூக்களுடன் கூடிய குளத்தின் அழகையும், அதனைச் சூழ்ந்த தென்னை மற்றும் வயல் வெளிகளையும் கண்டு மகிழ்சியுற்று தன்னுடன் வந்த பத்திரகாளி, சின்னப்பிள்ளை அம்மன், சந்தனமாரி, அனுமன், அறுபத்தி மூன்று நாயன்மார்கள், அந்தரமுடையார், கால சுவாமி, மற்றும் அனைத்து சிவலோக பரிவாரங்களுடன் அரசாட்சி செய்து வருகிறார். வாயிற்காவலனாய் இடும்பன் இருக்க அருதக்குட்டி பரம்பரையான பணிவிடையாளர்களின் பணிவிடையில் உலக மக்களைக் காக்கும் தாயாய் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.




      அகத்தியரை சிறப்பிக்கும் வகையில் ஆலைய கும்பாபிஷேக விழா மற்றும் வருட விழாக்களின் போதும், தற்போதும் அகத்தியர் ஆலையத்தில் இருந்து சந்தன குடம், பால் குடம், பன்னீர்க்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்கிறார்கள்.

இங்கு அம்மனின் அருளால் வளம் பெற்று வாழ்ந்த பக்தர் குடும்பங்கள் பலர் இடம்பெயர்ந்து சென்றாலும் அவர்கள் தங்கள் இருப்பிடங்களில் அம்மனுக்கு ஆலையம் அமைத்து வழிபடுகின்றனர்.

"தன்னை நம்பியவர்களுக்கு என்றும் நல்லருள் புரிந்து, குழந்தை செல்வம் இல்லாத தம்பதியினருக்கு நல்ல பேறு பாக்கியமும் அருளி, ஸ்ரீ செண்பக நாச்சியார் அம்மன், குலம் காக்கும் தாயாய் விளங்குகின்றாள்..."



குறிப்பு: அருள்மிகு ஸ்ரீ செண்பக நாச்சியார் அம்மன் வரலாறு, நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த, நமது மூதாதையரான அருதக்குட்டி அவர்கள் படைத்தருளிய வில்லிசைப் பாடல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளிலிருந்து எடுக்கப்பட்டது.


ஓவியங்கள் : எஸ். கனகராஜ், கவற்குளம்
புகைப்படங்கள் : க. அகில் அரசு, கவற்குளம்

Click here to download this in pdf